பட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி-யை 5%-ஆக குறைக்க வேண்டும்.. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
மதுரை: பட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை பாண்டிக்கோயிலில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு வியாபாரிகள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும், தீபாவளி பண்டிகையை கொண்டாட 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்.
கத்தி..பட்டாக்கத்தி.. ஆஹா தமிழிசையின் படாபட் பேச்சு.. ரைமிங்கும் டைமிங்கும் சூப்பரப்பு!
பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டாசு தயாரிப்பு தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மந்தன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தை 18 வயது முதல் 55 வயது வரை நீட்டிக்க வேண்டும். எனவும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும் நிரந்தர பட்டாசு கடை உரிமத்தை புதுப்பிக்கும்போது எளிய நடைமுறையை பின்பற்றுவது, பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் சட்ட அடிப்படையில் விலக்கு அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் தீபாவளிக்கு ஒருமாதத்திற்கு முன்பே பட்டாசு வணிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்
பசுமை பட்டாசு உற்பத்தியால் உலகளவில் பல்வேறு இடங்களில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வரும். உலகமே நமது பசுமை பட்டாசு உற்பத்தியை திரும்பி பார்க்கும். அதிக விற்பனை நடைபெறும். பழைய முறையில் பட்டாசு உற்பத்தி நடந்தால் நமக்கு முன்னேற்றம் இருக்காது. பசுமை பட்டாசு என்பது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு பாதிப்பில்லாத தொழிலாக இந்த தொழில் மாற்றப்படும் என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜசந்திரசேகரன், பட்டாசு தயாரிப்பது முழுவதும் கைகளால் செய்ய கூடிய தொழில். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ள விருதுநகரில் உள்ள ஒரே தொழில் பட்டாசு தயாரிப்பது தான்.
எனவே 18 சதவீத ஜிஎஸ்டியிலிருந்து கைத்தொழிலுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரியாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக கூறினார்.