மக்கள் மனங்களில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தெய்வமாக வாழ்கிறார்கள் - முதல்வர் பழனிசாமி
மக்கள் மனங்களில் இன்றைக்கும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தெய்வமாக வாழ்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மதுரை: அதிமுகவின் இரு பெரும் தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளனர். மக்கள் மனங்களில் இன்றைக்கும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தெய்வமாக வாழ்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலிதாவிற்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோவில் கட்டியுள்ளார். கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடை கொண்டது. முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன.
இந்த கோவிலை அமைக்க ரூ.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கோவில் கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஜெயலலிதா எம்ஜிஆருக்கு கோயில் கட்ட ஆரம்பித்த நாள் முதலே விரதம் இருந்து வரும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இன்று 108 பசு கன்றுகளை வைத்து கோ பூஜை நடத்தினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை இந்த கோவிலை திறந்து வைத்துள்ளனர். இந்த விழாவில் 234 அதிமுக தொண்டர்களுக்கு ரூ.10 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு வழங்கப்பட்டது. கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மரங்களை நட்டனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் திறந்து வைத்தார்! குவிந்த தொண்டர்கள்
கோவில் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இரு பெரும் தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த இரண்டு தலைவர்களும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
இருவருமே மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளனர். மேலும், மக்களுக்காக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் பாடுபட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளோம்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனங்களில் தெய்வமாக வாழ்த்து வருகிறார்கள். ஒருமித்த கருத்தோடு நாம் பணியாற்றி சட்டசபைத் தேர்தலில் வெற்றியை பெற வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா பொற்கால ஆட்சி மீண்டும் அமையும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவில் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை முன்பு நின்று வணங்கி போட்டோவும் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.