மு.க.ஸ்டாலின் பேசுவதை நம்பாதீர்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதை மக்கள் நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர் இவ்வாறு கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக வதந்தியை பரப்புவதாக சாடினார்.
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அவர் அது பற்றி ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துவிட்டதாக கூறினார்.
நிச்சயம் நடக்கும்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேசியதை சுட்டிக்காட்டினார்.
நம்ப வேண்டாம்
உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தாது என திமுக வதந்தியை பரப்பி வருவதாக சாடினார். மேலும், இந்த விவகாரம் மட்டுமின்றி தமிழக அரசு மீது குறை கூறி மு.க.ஸ்டாலின் பேசுவது எதையும் மக்கள் நம்பக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதால் அதை தமிழக அரசு நிறைவேற்றும் எனக் கூறினார்.
மழுப்பல்
இதனிடையே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், அதை கண்டுகொள்ளாதபடி மற்ற விவகாரங்களை பற்றி பேசினார். மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டதால், இது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதால் மேலும், அது தொடர்பாக தாம் பேசுவது சரியாக இருக்காது என நழுவினார்.
நிதானம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செயல்பாடுகளில் மிகுந்த மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். அது எவ்வளவு பெரிய சர்ச்சைகளாக இருந்தாலும் எதிர்கொள்வார். ஆனால், இபோது நிதானத்தை கடைபிடிப்பதோடு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார்.