விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்
மதுரை: தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விபரீத முடிவை பாஜக எடுக்க வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பட்டிமன்றத்தில் பேசிய அவர் இதைக் கூறினார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேசுபவர். மோடி தான் தமிழகத்தின் டாடி என்றெல்லாம் அசரடித்தவர். அப்படிப்பட்ட நபர் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்தா, இல்லை முதல்வரின் எண்ணத்தை பிரதிபலித்தாரா என விவாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
விபரீதம் வேண்டாம்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிரித்துக்கொண்டே சீரியஸான கருத்தை பதிவு செய்தார். விபரீத முடிவெல்லாம் எடுக்க வேண்டாம், நீங்க டெல்லியில் ஆட்சியை பிடிங்க..வேண்டாமென்று சொல்லமாட்டோம், அங்க மோடி இருக்கட்டும்..இங்கு அண்ணன் எடப்பாடி இருக்கட்டும் எனப் பேசினார்.
நட்பாக பேசுங்க
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க ஆதரவு கொடுக்கிறோம், அதைப்போல் எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க ஆதரவு கொடுங்க..எங்க இடத்திற்கு வர வேண்டும் என பாஜக நினைக்க வேண்டாம், அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். மேலும், நீங்க நட்போடு பேசுங்க தவறாக பேசாதீர்கள் என பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசனை பார்த்து தெரிவித்தார்.
பச்சைத்தமிழன்
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வல்லமையோடு இருப்பதாகவும், ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாகவும் கூறிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பச்சைத்தமிழனின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக பேசினார்.
கொந்தளிப்பு
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சைக் கேட்டு மேடையில் ஒப்பனைக்கு சிரித்த ஸ்ரீனிவாசனின் முகம் சற்று நேரத்தில் இறுகத்தொடங்கியது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என நாம் பேசுவது, அதிமுகவுக்கு தவறாக பேசுவது போல் தெரிகிறதோ என பாஜக தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.