எப்ப பார்த்தாலும் அழுகை, ஒப்பாரி.. எல்கேஜி குழந்தை மாதிரி.. ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் காட்டம்!
முக ஸ்டாலினை ஆர்பி உதயகுமார் சரமாரி விமர்சித்துள்ளார்
மதுரை: ஒரு குழந்தை, எப்பவாவது அழுதால் பரவாயில்லை.. எப்ப பார்த்தாலும் ஒப்பாரி வெச்சுக்கிட்டு, அழுதுட்டும் இருந்தால் எப்படி? எதிர்க்கட்சி தலைவர் அப்படிதான் இருக்கார்.. என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 437-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது.. திருமலை நாயக்கர் மகாலில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியதாவது: "வருமான வரித்துறைக்கு வருவாய் துறைக்கும் சம்பந்தம் கிடையாது.. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார்.
சட்ட ரீதியான தண்டனை
பிற மாநிலங்களில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படும் போது எவ்வாறு கையாண்டு இருக்கிறார்களோ அதுபோலவேதான் இங்கும், தவறுகளைக் கண்டுபிடிக்க ஏற்ற வகையில்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனைகள் பெற்று தரப்படும் என்று அமைச்சர் தெளிவாகவே சொல்லி உள்ளார். அதனால் குற்றவாளிளுக்கு உரிய தண்டனை உண்டு.
பிரதமர் மோடி
ஸ்டாலினை பொருத்தவரை அவரை தவிர மற்ற எல்லாரையுமே பதவி விலக வேண்டும்.. ஏன் பாரத பிரதமரையும் பதவி விலக வேண்டும் என்று சொல்கிறார்.. இந்தியாவின் பெருமையை பல்வேறு நாடுகளுக்கு எடுத்து சென்று வருகிறார் நம்முடைய பாரத பிரதமர் ... ஆனால் அவரை வெளிநாட்டு பிரதமர் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.
முக ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு காலில் கல் தடுக்கினாலும், கல் குத்தினாலும், முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் பதவி விலகி ஆட்சியை கலைக்க வேண்டும்.. காற்றடித்தாலும் சரி... கடலில் அலை அடித்தாலும் சரி... அடிக்கிற காற்றே நின்று விட்டாலும் சரி.. கடலில் அலையே நின்று விட்டாலும் சரி.. எல்லாத்துக்கும் நாங்கள் தான் காரணம் என்று சொல்வார். கடலில் சுனாமி போல் பெரிய அலைகள் வரத்தான் செய்யும்.. அதனை எதிர்கொள்ளும் தயாரான நிலையில் அரசு எடுக்க வேண்டும்.
முனைவர் பேச்சு
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பலமுறை சொல்லி உள்ளோம்.. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் சிலநேரம் எல்கேஜி படிக்கும் குழந்தை போல் ஆகி விடுகிறார். சிலநேரம் பட்டதாரி முனைவர் போல் பேசுகிறார்... எந்த நிலையில் பார்ப்பது என்று எங்களுக்கு புரியாத புதிராய் இருக்கிறது..
எதிர்க்கட்சி தலைவர்
என்னேரமும் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தாய் தந்தையர் கூட விரும்பமாட்டார்கள் அதேபோல் எந்நேரமும் அழுது கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை தமிழக மக்களும் விரும்ப மாட்டார்கள்... ஒப்பாரி வைக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் ஆணித்தரமாக தனது கருத்தை பதிவிட வேண்டும் விவாதிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்... அதைவிட்டு விட்டு, இப்படி எப்பொழுதும் ஒப்பாரி வைக்கும் ஒரு எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் பார்த்ததில்லை" என்றார்.