ஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ!
மதுரை : திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு அம்னீசியா என நினைக்கிறேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தனியார் மயமாக்கிய திமுக :
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "127 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் தான் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமானது.
ஸ்டாலினுக்கு அம்னீசியா :
ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு அம்னீசியா நோய் என நினைக்கிறேன். ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்து உள்ளதால் அரசை குற்றம் சாட்டி பேசி வருகிறார். ஸ்டாலினுக்கு உச்சியில் சனி பிடித்துள்ளது.
திமுக கூட்டணி உடையும் :
தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக - காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மக்கள் விரோத திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. திமுக கூட்டணி உள்ளே பிரச்சனை வந்துவிட்டது. திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும்.
7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை :
தூக்கு மேடைக்கு போன 7 தமிழர்களை காத்தவர் ஜெயலலிதா. 7 தமிழர்கள் விடுதலை என்பது சர்வதேச பிரச்சனையாக உள்ளது. 7 தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்வர் உரிய அறிவிப்பு வழங்குவார்" என கூறினார்.