கருகலைப்பது போல கிடையாது.. எச்.ராஜாவுக்கு செல்லூர் ராஜு செம பதிலடி
மதுரை: யார் வேண்டுமானாலும் அதிமுக ஆட்சியை கலைத்துவிட முடியாது. ஆட்சி கலைப்பு கருக்கலைப்பு போன்றதா? என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் பாஜக சார்பில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அக்கட்சி, தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், திமுக, இந்துக்களுக்கு விரோதமான கட்சி அல்ல என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நான் அதை நம்ப மாட்டேன். எப்போது நம்புவேன் தெரியுமா? சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கட்டும். அதுவரை அவர் கூறுவதை நான் நம்பமாட்டேன்.
ராஜா பேச்சு
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதுதான் திமுக. எனவே அவர்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை.
தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார். இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.
பதிலடி
இந்தநிலையில், எச்.ராஜாவுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பல்லவன் நகரில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க, இன்று பூமி பூஜை நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஸ்டாலின் கருத்துதான்
அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்று, எச்.ராஜா சொன்னாரா, இல்லையா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், எங்களுக்கு திமுகதான் முக்கியமான எதிர்க்கட்சி. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்தான். திமுகவோ, ஸ்டாலினோ கூறாத வேறு எந்த கருத்துக்களையும் நாங்கள் பெரிதாக சிந்திப்பது இல்லை.
கலைக்க முடியாது
இன்னொன்றும் சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் அதிமுக ஆட்சியை கலைத்துவிட முடியாது. ஆட்சி கலைப்பு கருக்கலைப்பு போன்றதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின், சிறப்பான செயல்பாட்டால் எதிர்கட்சியினர் தொடர்ந்து அவர்கள், விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். ஸ்டாலினும் ஆட்சியை கலைக்க வேண்டும் என முன்பு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது சொல்வதில்லை கவனித்திருப்பீர்களே! அதுதான் அதிமுக பலம். எடப்பாடி பழனிச்சாமியின் சிறந்த செயல்பாட்டால், நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயத்தில் ஸ்டாலின் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகிறார். இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.