அது ஒன்னுமில்லீங்க.. எங்கள் அரசை குறைகூறுகிறார் என்றால் கமலுக்கு மூளைக்கோளாறுதான்- அமைச்சர் பொளேர்
Recommended Video
மதுரை: எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார் என்றால் கமல்ஹாசனுக்கு மூளையில் கோளாறு உள்ளது என்றுதான் அர்த்தம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கமல்ஹாசனுக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தம் போல. அவர் எது சொன்னாலும் அதற்கு கடுமையாக விமர்சிப்பதையே தமிழக அமைச்சர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
டெல்லியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தினர். அவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அழுத்தம்
கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அரசு சரியாக செய்யவில்லை என கூறுகிற விசயங்களை எதிர்க்கட்சிகளின் குரலாக பார்க்க கூடாது. மக்களின் குரலாக அரசு பார்க்க வேண்டும். நாங்கள் அறவழியில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.
கமல்ஹாசன்
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மதுரையிலிருந்து அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: கமல்ஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்த பிறகு கருத்துச் சொல்ல வேண்டும்.
புண்படும் வகையில்
எங்கும் செல்லாமல் எங்கோ இருந்து கொண்டு அதிமுக அரசு துருப்பிடித்த அரசு என்று கூறுவது சரியானது கிடையாது. அவர் குடும்ப வாழ்க்கையிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி நிறைவான எந்த ஒரு அரசியல் தலைவர் என்ற பணியையும் செய்யவில்லை. மக்கள் மையம் என்று ஆரம்பித்துவிட்டு அதிலிருந்து நிறைய அறிவாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மனம் புண்படும் வகையில் அவரது நடைமுறைகள் உள்ளதாக இருக்கிறது.
தூய்மையானவர்
அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் சொல்ல வேண்டியதில்லை. அது மக்களுக்கு தெரியும். அவருக்கு புத்தி சரியில்லை. அவர் இன்னும் சினிமா பாணியில் இருக்கிறார். கமல்ஹாசன் தூய்மையானவர் என்பதை எங்களால் ஏற்க முடியாது.
சரியில்லை
நடிப்பு உலகத்தில் அவர் சிறந்த கலைஞர், தமிழன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. உலகநாயகன் நடிப்பில் சிறந்த மேதை. ஆனால் அவரது வாழ்க்கையை பொறுத்தவரை தூய்மையானவர் இல்லை. இதுவரை எந்த மக்கள் பணியும் ஆற்றவில்லை என்றார். சினிமாவில் நடித்து விட்டு எல்லோரும் முதல்வராக வேண்டும் என்று நினைப்பது சரியில்லை.
கற்றுக் கொள்ள வேண்டும்
தமிழக மக்களுக்கு அவர் இதுவரை என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார். அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் அவர் நடிப்பு உலகிற்கு செல்லட்டும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அரசியலுக்கு அவர் இன்னும் கற்றுக் கொண்டு வரவேண்டும்.
அடிபணிய தேவையில்லை
மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டார்கள். அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தமிழக மக்களுக்கு நல்ல நிவாரணம் வழங்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நாங்கள் நம்புகிறோம். அதேநேரம் நாங்கள் மத்திய அரசுக்கு அடிபணிய தேவையில்லை என்றார்.