நடிகர்களுக்கு கூட்டம் கூடும்; ஆனால் அது ஓட்டாக மாறாது -செல்லூர் ராஜூ
மதுரை: நடிகர்களுக்கு கூட்டம் மட்டும் தான் கூடும் என்றும் அது எதுவுமே ஓட்டாக மாறாது எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக, பாஜக, என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பரப்புரை செய்ய தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர்கள் கூடும் கூட்டத்தை பார்த்து அது ஓட்டாக மாறும் என கருத வேண்டாம் எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை குஷ்புவுக்கு பெரியளவில் கூட்டம் திரண்டது என்றும் ஆனாலும் அந்த தேர்தலில் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை என்றார்.
குஷ்பு தற்போது பாஜகவில் இருக்கும் சூழலில் கூட்டணிக் கட்சி பிரமுகர் என்பதை மறந்து அவரை சீண்டும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். இவர் நடிகர் கமல்ஹாசனை மனதில் வைத்து இந்தக் கருத்தை கூறியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆரும், பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.