எடப்பாடியாரை குஷிபடுத்திய செல்லூரார்... மதுரையில் ராஜ வரவேற்பு அளித்து அசத்தல்
மதுரை: திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ராஜ வரவேற்பு கொடுத்து குஷிபடுத்தியுள்ளார்.
திண்டுக்கல் அடியனூத்தில் ரூ.327 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு முதல்வர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் இரண்டு மாவட்ட அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மதுரை விமான நிலையம் முதல் அவுட்டர் பைபாஸ் சாலை வரை அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சிகளை கண்டு முதல்வர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி ஜீப்பில் முதல்வரை அழைத்துசென்று வரவேற்பை காண வைத்துள்ளார் செல்லூரார். ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த முதல்வரை அமைச்சர் உதயகுமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இந்த முறை செல்லூர் ராஜா கோட்டாவில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டாமை படத்தில் வரும் சரத்குமாருக்கு ஊர்மக்கள் இருமருங்கிலும் நின்று வணக்கம் செலுத்துவதை போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலையின் இரு மருங்கிலும் ஆட்களை நிற்கவைத்து வரவேற்பு கொடுத்தார் செல்லூர் ராஜு. மேலும், பற்றாகுறைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்களை திரட்டி வந்து அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள வைத்தார்.
இதனிடையே கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பொதுவிடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கும் தமிழக அரசு, முதல்வர் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை 4 மணி நேரமாக ஒரே இடத்தில் அடைத்து வைத்தது ஏன் என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.