குடிமகன்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் திறப்பு... அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
மதுரை: குடிமகன்களும், பொருளாதாரமும் பாதிக்கக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறக்க திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். தமிழகத்தில் மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஆனாலும் இதனை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என நேற்று முதல் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றன. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கூட, டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு ஊரடங்கு என்றால் அதற்குரிய உண்மையான பொருள் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மதுரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். எல்லோரும் கடையை திறந்த பின்பு நாம் மட்டும் திறக்காமல் இருக்க முடியாது என்றும், குடிமகன்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக்கை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக கூறினார்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு... அப்படியெனில் ஊரடங்குக்கு உண்மையான பொருள் என்ன ? -மு.க.ஸ்டாலின்
மேலும், இது மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மதுவாங்குவதை தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என விளக்கம் கொடுத்தார்.