எங்க ஊரு மருமகள் பிரேமலதா.. விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் எல்லாம்.. செல்லூர் ராஜூ கலகல!
மதுரை: பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள் அவரிடம் தவறான செய்தியை கூறியதால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார்.. விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் வளமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
மதுரை தங்கராஜ் சாலையில் 1986 ஆம் ஆண்டு முதல் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் 5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது, இதை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,
இக்கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் ஆட்சியர் அன்பழகன், ஆணையர் விசாகன் ஆய்வு செய்தனர்,
மதுரை வளர்ச்சி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது,
வெங்காய விலை உயர்வு ஏன்
திமுக ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர், திமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மதுரைக்கு வர பயப்பட்டார். பீகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால் தமிழகத்தில் வெங்காய விலை உயர்ந்தது. திமுக ஆட்சி காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறை தேர்தலை அதிமுக ஆட்சியில் 2 முறை நடத்தி முடித்து உள்ளோம்.
அரசியல் காரணம்
திமுக ஆட்சி காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அதிமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும். கொரோனா தொற்று காலகட்டத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்.
விஜயகாந்த் பிறந்த இடம்
பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள் அவரிடம் தவறான செய்தியை கூறியிருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு மதுரையில் சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார். விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் சிறப்பாக மாறியுள்ளது" என்றார்.