அதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: அதிமுகவை யாரும் ஆட்டுவிக்கவில்லை என்றும், மக்கள் கையில் தான் கட்சி உள்ளது எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தமிழக மக்களுக்காக தான் மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளதாகவும், அவ்வாறு இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும் என்றும் விளக்கம் அளித்தார். மக்களுக்கு நல்லது செய்ய வெண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் மத்திய பாஜக அரசுடன் தாங்கள் சுமூகமாக செல்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மறைந்த ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டவர் என்றும், அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவும் தெரிவித்தார். இஸ்லாமியர்களுக்காக தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களையும், அறிவிப்புகளை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமைப்படுவதாக விமர்சித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களை பார்த்து திமுகவினர் வியந்துவருவதாக தெரிவித்தார்.
மதரீதியாக தமிழக மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருவதாகவும், இதனை கண்டிக்கும் நோக்கில் தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கூட்டறிக்கை கூட வெளியிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவை பாஜக தான் இயக்கி வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடியோடு மறுத்த செல்லூர் ராஜூ, பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். இதனிடையே சட்டமன்றத்தில் முதல்வர் கேட்ட கேள்விக்கு, மு.க.ஸ்டாலினால் பதிலளிக்க முடியவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் திடீரென ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், ஸ்டாலின் இன்று மதுரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.