ஒழுக்கத்திற்கு நான் தான் உதாரணம்... அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேச்சு
மதுரை: விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு ஒழுக்கம் கிடைக்கிறது என்றும், சிறுவயதில் தாம் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் இப்போது வரை ஒழுக்கத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.
மேலும், ஒழுக்கத்திற்கு தாமே சிறந்த உதாரணம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ மார்தட்டிக்கொண்டார்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை மதுரையில் தொடங்கி வைத்துவிட்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் பேச்சு
மதுரையில் விளையாட்டு போட்டி ஒன்றை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, மாணவப்பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றதால் தான் தாம் இன்றும் ஒழுக்கமுடன் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஒழுக்கத்திற்கு தாம் தான் உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு வழங்குவதாகவும், தமிழக அரசின் எந்த துறை மீதும் குறை சொல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். குறைகூட முடியாத வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளதாக கூறினார்.
நெட்டிசன்ஸ்
ஒழுக்கத்திற்கு தாம் தான் சிறந்த உதாரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதை நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். மேலும், வறட்சியை போக்க பொங்கல் பரிசு என அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எது பேசினாலும்
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை அவர் எது பேசினாலும் ஒன்று கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகும், இல்லையென்றால் சர்ச்சையில் சிக்கும். என்ன செய்வது எங்கள் அமைச்சரின் ராசி அப்படி என்கின்றனர் மதுரை ர.ர.க்கள்.