கமல்ஹாசனை ஏன் இப்படி திட்டுகிறார் செல்லூர் ராஜு?
Recommended Video
மதுரை: கமல்ஹாசனுக்கு மூளையில் கோளாறு என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு.
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் 3வது முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு கள நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தேசிய அளவில் உதவியை பெறுவதற்காக, அமிதாப்பச்சன், ஆமீர்கான் போன்றவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக கமல் தெரிவித்தார்.
அரசு சார்பில் செய்யும் உதவிகள் போதவில்லை என்றும், எல்லா மக்களையும் சென்றடையவில்லை என்றும் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறிய கமல்ஹாசன், நிவாரண தொகையை 3 தவணைகளாக அரசு வழங்குவது என்பது, வெந்த புண்ணில் வேல் பாய்க்கும் செயல் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, துருப்பிடித்த அரசல்ல, மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு. தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.