டெபாசிட் வாங்குறதுக்கு போய் பணப்பட்டுவாடா.. அமமுகவை கிண்டல் செய்யும் செல்லூரார்
மதுரை: டெபாசிட் வாங்குவதற்காகவே பணப்பட்டுவாடா செய்கின்றனர் என அமமுகவை அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 23 -ஆம் தேதி வருகிறது. இந்த தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் மாறி மாறி கூறிக் கொள்கின்றன. இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் டெபாசிட் பெறுவதற்காகவே அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர்.
பொதுவாக பணப்பட்டுவாடா புகார் ஆளும்கட்சியினர் மீதுதான் வரும். ஆனால் தற்போது அதிலும் மாற்றம் வந்துவிட்டது.
யார் சிறந்தவர்கள், யார் பணியாற்றுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்தால் அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.