மாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல்
மதுரை: இலவச மிக்சி கிரைண்டர் திட்டம் மூலம் மாமியார், மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அமைச்சர்கள் சிலர் பேசுவது மிகவும் கேலிக்குரிய வகையில் உள்ளது. ஏதோ அம்மா புகழ் பாடுகிற பேர்வழி என்ற வகையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பேச்சை பேசுகிறார்கள்.
அந்த வகையில் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்ன பேசினாலும் அது என்டர்டெயினிங்காக இருக்கிறது. ஜெயலலிதாவின் மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் வெற்றி குறித்து பேசும் போது அமைச்சர் செல்லூரார் எப்படி பேசியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.
[ அது ஏங்க இந்த கடைக்கு மட்டும் கூட்டம் அதிகமாக போகுது? ]
இரு சக்கர வாகனம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கான மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 286 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்கினார்.
பிரச்சினைகள்
அப்போது அவர் கூறுகையில் தொட்டில் குழந்தை திட்டத்திலிருந்து இருந்து இப்போது இருக்கிற மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் வரை என மகளிருக்கான திட்டங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஜெயலலிதா வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டம் குடும்பத்தில் எத்தனை பிரச்சினைகளை தீர்த்துள்ளது தெரியுமா.
தீர்த்து வச்சது
இந்த திட்டம் மாமியார், மருமகள் சண்டையை போக்கியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால் கையால் மாவு அரைக்கும் போது நான் மட்டும்தான் அரைக்க வேண்டுமா, நீ அரைக்கக் கூடாதா என சண்டைகள் எழும். இதையெல்லாம் தீர்த்து வச்சது என் தாய் (ஜெயலலிதா) தானே.
வாழ்க்கை தரம்
அவருக்கு திருமணம் நடந்ததா, குடும்பம் இருந்ததா. இதெல்லாம் அவருடைய சிந்தனை. மக்களுடைய வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் அந்த திட்டங்களை கொண்டு வந்தார் என்றார் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.