மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக... திண்ணை பிரச்சாரத்தில் களமிறங்கிய செல்லூர் ராஜூ
மதுரை: திண்ணை பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, போட்டியாக அமைச்சர் செல்லூர் ராஜூ திண்ணை பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
சூலூரில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கும் முதலமைச்சர் பழனிசாமி, வரும் 14-ம் தேதி வரை 8 நாட்களில் மொத்தம் 54 இடங்களில் பேசுகிறார். இதே போல், மற்ற கட்சித்தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்ணை பிரச்சாரம்
இதற்கிடையே, ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மு.க. ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் திண்ணை பிரச்சாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
சிரிப்பலை
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். முனியாண்டியை ஆதரித்து, அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் செய்தார். தங்களை தேடி வீட்டுக்கு வரும்போது, ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று செல்லூர் ராஜூ கூறியதும், மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
தீவிரப் பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்குசிலுக்கன்பட்டி, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, செக்காரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்டாலின் வாக்குறுதி
மேலத்தட்டப்பாறை கிராமத்தில் வீதிவீதியாகச் சென்ற ஸ்டாலினிடம், குடிசை வீட்டில் வசிக்கும் மூதாட்டி பேச்சியம்மாள் என்பவர், வீடு கட்டித்தரச் சொல்லி கேட்டார். அப்போது, தி.மு.க ஆட்சி அமைந்ததும் நிச்சயமாகக் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.