அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்!
மதுரை: அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ சாடியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சார்பில் பெத்தானியாபுரம் பகுதியில் பேட்டரி வாகனங்கள், மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேட்டரி வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் பாசனக் கால்வாய் தூர் வாரப்பட உள்ளதாக கூறினார்.
குடிநீதி தட்டுப்பாடு இல்லை
மதுரையில் மாடக்குளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளை பராமரிக்கும் வழிகளை மேற்கொண்டதால்தான் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுகிறது
பாதாளச் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதற்குக் காரணம் பாதாளச் சாக்கடையில் உள்ள பழைய பைகள் தான் என்ற அவர் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
திமுகவுக்கு அருகதை இல்லை
இதனிடையே தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையில் அதிமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ அதிமுக அரசை குறைகூற திமுகவுக்கு அருகதை இல்லை என்றார்.
பொய் திட்டங்களை கூறி வெற்றி
திமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். பொய்யாக இல்லாத திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத திட்டங்களையும் கூறி தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
எப்படி இப்படி வாக்குறுதி அளித்தார்?
நாடாளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் தேவையில்லாமல் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார். அவர் எப்படி நாடாளுமன்ற தேர்தலின் போது மாநில அரசு சம்பந்தபட்ட வாக்குறுதியை அளித்த்தார் என தெரியவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.