"கொரோனா கொண்டான்".. செல்லூர் ராஜுவை வரவேற்க திரண்ட கூட்டம்.. சமூக இடைவெளி போயே போச்!
மதுரை: கொரோனாவை வென்று வீடு திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்கவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் உடன் இருந்து கவனித்துக்கொண்டதால் அவருக்கும் தொற்று உறுதியானது. இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பூரண குணம் அடைந்த நிலையில் செல்லூர் ராஜு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது அதிமுகவினர் கோரிப்பாளையத்தில் உள்ள அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக நின்று இருந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. தன்னை வரவேற்றவர்களுக்கு செல்லூர் ராஜு காரில் இருந்து இறங்கி நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வடிவேல் சொன்னது போல போறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு இப்போது குணமடைந்து விட்டது . என் வாழ்வில் உறுதுணையாக இருக்கும் மனைவிக்கு தொற்று ஏற்பட்ட போது அஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஆறுதல் சொல்ல சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம்.
நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபடவுள்ளேன் என்று கூறினார். அமைச்சரை வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் திரளாக கூடியிருந்தனர் இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறிவிட்டனர் அவர்களை அமைச்சர் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.
#WATCH: Tamil Nadu Minister Sellur Raju who had recovered from #COVID19, was welcomed by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) workers on returning to Madurai; social distancing norms flouted. (30/7) pic.twitter.com/VdhIcEk2LC
— ANI (@ANI) July 31, 2020