முடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
மதுரை: எவராலும் முடியாது எனக் கூறியதை தன்னால் முடியும் என முடித்துக்காட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டம் பற்றி அறிந்தவர்கள் யாரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதில்லை என்றும், அந்த சட்டத்தை பற்றி அறியாதவர்கள் தான் போராட்டம் நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் இதனைக் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது, தொடராது என பலரும் கூறிய நிலையில், அதனை முறியடித்து அதிமுக ஆட்சியை தொடரச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என பெருமிதம் தெரிவித்தார்.
அமைச்சர் உதயகுமாரை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதல்வராக வேண்டும் முதல் குரல் கொடுத்தவர். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோதே, இது மாதிரியான கோரிக்கையை வைத்து ஓ.பி.எஸ்.க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். பின்னர் அதிமுகவில் வீசிய உட்கட்சி சூறாவளியில் தனது நிலைப்பாட்டை மாற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரானார். கட்சியிலும் அம்மா பேரவை செயலாளராக உள்ளார். வருவாய்த் துறையுடன் தகவல் தொழில் நுட்பத்துறையையும் உதயகுமார் இப்போது கூடுதலாக கவனித்து வருகிறார்,
ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி ஆக்டிவாக செயல்படக்கூடிய நபர்களில் அமைச்சர் உதயகுமாரும் ஒருவர். இப்போது கூட ஜெயலலிதா 72-வது பிறந்தநாளை ஒட்டி மதுரை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு சைக்கிள் பிரச்சாரம் நடத்தினார். இது போன்ற கட்சிப்பணிகளில் யாரும் குறைகூறாத வண்ணம் செயல்படுபவர். இதனிடையே கட்சித்தலைமையின் மனம் குளிரும் வகையில் அவ்வப்போது புகழாரமும் சூடுவார்.