மதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
மதுரை: கொரோனா பாதித்த மதுரை நபருக்கு நேற்று மாலை முதல் சிகிச்சைகள் ஏற்கவில்லை என்றும் அவரது நிலை மோசமடைந்தது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அவர் இறந்தது எதனால் என்பது குறித்தும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது.
அதில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது.
விஜயபாஸ்கர்
உயிரிழந்த நபர் மதுரையைச் சேர்ந்தவர். அவருக்கு 54 வயதாகிறது. அவர் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3ஆவது நிலையை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அதுகுறித்து விளக்கம் அளித்தார்.
எப்படி கொரோனா
அவர் கூறுகையில் மதுரையைச் சேர்ந்த கொரோனா பாதித்த நபர் ஈரோட்டில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். அதனால் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இவர் மதுரையிலிருந்து எங்கெங்கு சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளோம் என தெரிவித்தார்.
உடல்நிலையை சீராக்க
இந்த நிலையில் அந்த நபர் இன்று அதிகாலை இறந்தது குறித்து அமைச்சர் தனது ட்விட்டரில் கூறுகையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை கோவிட் 19 நோயாளிக்கு நேற்று மாலை முதல் சிகிச்சைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது நிலை மோசமாக இருக்கிறது. அவரது உடல்நிலையை சீராக்க போராடி வருகிறோம் என தெரிவித்திருந்தார்.
ஸ்டீராய்டு மருந்துகள்
இந்த நிலையில் அவரது மற்றொரு ட்வீட்டில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் நுரையீரல் பிரச்சினைக்காக நீண்ட காலமாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு அதிகளவு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் இருந்துள்ளது.