நானும் தான் கருணாநிதி மகன்... நன்றி மறப்பது எளிதாகிவிட்டது... மு.க.அழகிரி வேதனை
Recommended Video
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, ஒருவர் மட்டுமே கருணாநிதிக்கு மகன் அல்ல நானும் கருணாநிதியின் மகன் தான் என திருமணவிழாவில் பேசியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற வழக்கறிஞர் மோகன்குமார் இல்ல திருமண விழாவில் பேசிய அவர், நன்றி மறப்பது இந்தக்காலத்தில் எளிதாகிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
பொதுவிடங்களில் அதிமுகவினர் தன்னை பார்த்தால் கூட பரஸ்பர வணக்கம் தெரிவித்து பேசிவிட்டு செல்வதாகவும், உடன் பழகிய திமுகவினர் ஓடி ஒளிந்துகொள்கின்றனர் எனவும் அழகிரி கூறினார்.
டி.ஆர்.பாலு மகனுக்கு திமுக இளைஞரணியில் பதவி...? அடுத்தடுத்து நிகழும் அதிரடிகள்
கொண்டாட்டம்
மு.க.அழகிரியின் 70-வது பிறந்தநாளான இன்று கொண்டாட்டங்களை தவிர்த்து திருமண விழா ஒன்றில் மட்டும் கலந்துகொண்டார். வழக்கமாக மு.க.அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கறி விருந்துடன் குறைந்தது மூன்று நாட்களுக்காவது திருவிழாவை போல் மதுரையில் நடத்துவர். இதெல்லாம் அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவரை மட்டுமே. அதற்குபிறகு சுருதியை குறைத்த அவரது ஆதரவாளர்கள், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட பின்னர் கேக் வெட்டுவதோடு கொண்டாட்டங்களை நிறுத்திக்கொண்டனர். மனவேதனையில் இருக்கும் அழகிரியும் பிறந்தநாளன்று தன்னை யாரும் வந்து பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
வலியுறுத்தல்
இதனிடையே கருணாநிதி மறைந்தது முதல் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அறவே தவிர்த்த அழகிரி இந்தாண்டும் எந்த ஏற்பாடும் வேண்டாம் என மிக உறுதியாக மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனிடம் கூறிவிட்டார். மேலும், பிறந்தநாளன்று மதுரையில் இருக்க வேண்டாம் சென்னைக்கு சென்றுவிட முடிவெடுத்த அழகிரியை, வழக்கறிஞர் மோகன் குமார் தனது இல்ல திருமண விழாவை தலைமையேற்று நடத்திக்கொடுக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான கோபிநாதன், மன்னன், ராஜூ போன்றோரும் அழகிரியை அவரது பிறந்தநாளன்று எப்படியாவது மதுரையில் இருக்க வைக்க விருப்பப்பட்டனர். அதற்கு இந்த திருமண விழா வழியமைத்து கொடுத்தது.
வேதனை
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற வழக்கறிஞர் மோகன் குமார் இல்ல திருமண விழாவில் பேசிய அழகிரி, ஒருவர் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல; நானும் கருணாநிதியின் மகன் தான் என பேசினார். மேலும், இந்தக்காலத்தில் நன்றி மறந்து நடந்துகொள்வது மிக எளிதாகிவிட்டது என்றும், அதிமுகவினர் கூட தன்னை சந்தித்தால் பேசுவதாகவும், உடன் பழகிய திமுகவினர் தன்னை கண்டாலே ஒளிந்துகொள்வதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், தன்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் தமக்கு தெரியும் எனவும் அழகிரி பொடி வைத்துப் பேசினார்.
மகன் இல்லம்
திருமண விழாவை முடித்த அழகிரி நேராக மதுரை விமான நிலையம் சென்று சென்னையில் உள்ள மகன் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார். மதுரையில் இருந்தால் தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரிடும் என்பதால் அவர் சென்னைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே காலையில் எளியமுறையில் மதுரை சத்யசாய் நகரில் உள்ள இல்லத்தில் கேக் வெட்டி தனது ஆதரவாளர்கள் மன்னன் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும் கேக் ஊட்டியுள்ளார் அழகிரி. இதனிடையே அழகிரி பிறந்தநாளுக்காக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.