திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல்... திடீரென 'ஆப்' ஆன மு.க. அழகிரி!
Recommended Video
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்க வேண்டாம்... அமைதியாக இருங்கள் என்று மு.க. அழகிரி திடீரென கட்டளை பிறப்பித்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் கோலோச்சலாம் என நினைத்தார் மு.க. அழகிரி. ஆனால் ஸ்டாலின் தரப்பு பிடி கொடுக்கவே இல்லை. கருணாநிதி குடும்பத்தினர் அழகிரியுடன் பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, சில பல செட்டில்மென்டுகளையும் முடித்தும் விட்டனர்.
ஆனாலும் அழகிரி, திமுகவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துதான் வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் தமது ஆதரவாளர்களை அதிமுக அணிக்கு வாக்களிக்க உத்தரவிட்டு ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இந்நிலையில் 4 தொகுதி சட்டசபை தேர்தல்களில் ஸ்டாலினை வீழ்த்த சீமான், கமல்ஹாசனுடன் அழகிரி கை கோர்க்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் உட்பட 4 தொகுதி தேர்தல்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம். நான் சென்னையில்தான் இருக்கிறேன். இரண்டு நாட்கள் கழித்து நான் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று மட்டும் தகவல் வந்துள்ளது என்கின்றனர்.
மேலும், லோக்சபா தேர்தலைப் போல அதிரடியாக அழகிரி இறங்குவார் என எதிர்பார்த்தோம்.. ஆனால் இப்போது திடீரென அமைதியாக இருக்க சொல்லிவிட்டார் அண்ணன் என ஆதங்கப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.