ஊரில் இருந்தால் தானே வம்பு... மலேசியா போயிடுவோம்... அழகிரி ஆதரவாளர்கள் டூர்
மதுரை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து மு.க.அழகிரி தரப்பிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பே சிங்கப்பூர், மலேசியா என பறந்துவிட்டனர்.
ஊரில் இருந்தால் திமுகவுக்கு எதிராக வேலைசெய்தார்கள் என்ற பழிச்சொல் வரும் என்பதால் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் தலைமையில் ஒரு பட்டாளமே சிங்கப்பூர் சென்றிருக்கிறது.
புத்தாண்டை கொண்டாடியது போலவும் இருக்கும், தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக்கொண்டது மாதிரியும் இருக்கும் என்பதற்காக அவர்கள் வெளிநாடு சென்றார்களாம்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சி.ஏ.ஏ..வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- ஸ்டாலின்
நடவடிக்கை
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரியை கட்சியில் இருந்து விலக்கியது முதல் அவர் ஒரு அரசியல் பார்வையாளராகவே இருந்துவருகிறார். இதுவரை மாற்றுக்கட்சிக்கு செல்வதற்கான எந்தவொரு முன்னெடுப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவ்வப்போது அவரது தம்பி ஸ்டாலின் மீது மட்டும் விமான நிலைய பேட்டிகளில் சீறுவார்.
சிக்கவில்லை
மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க பல முறை தூண்டில் போடப்பட்ட நிலையிலும் அவர் பிடிகொடுக்காமல் கழன்றுகொண்டார். மேலும், உள்ளூர் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அடிக்கடி அழகிரியின் புகழை பாடி அவருடன் நெருக்கம் பாராட்ட முயற்சித்தார். ஆனால் எதற்கும் சிக்காமல் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை மட்டும் கவனித்து வருகிறார் அவர்.
ஆதரவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர்களை வளைக்க பாஜக, அதிமுக திட்டமிட்டு அதற்காக காய் நகர்த்தியது. கட்சியில் இல்லாவிட்டாலும் மறைந்த தனது தந்தைக்காக திமுகவுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என்பது அழகிரியின் எண்ணமாம். கோபத்தில் பேட்டிகள் கொடுத்தாலும், தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அவர்.
சிங்கப்பூர் டூர்
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் மதுரையில் இருந்தால் வீண் வம்பும், பழிச்சொல்லும் வரும் என்பதால் அழகிரி ஆதரவாளர்களான மன்னன், கோபிநாதன், ராஜூ, உள்ளிட்டோர் சிங்கப்பூர், மலேசியா என டூர் சென்றுவிட்டனர். இதன் மூலம் தாங்கள் யாருக்கும் வேலைசெய்யவில்லை அமைதியாக ஒதுங்கிக்கொண்டோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்ட திமுக பொறுப்புக்குழுவில் உள்ள எஸ்.ஆர்.கோபியும் அழகிரி ஆதரவாளர்களுடன் டூர் சென்றிருப்பது தான் குறிப்பிடத்தக்கது.