ஜனவரி 3-ல் மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் ஹோட்டலில் ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை
மதுரை: மதுரையில் ஜனவரி 3-ந் தேதி முக அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் மு.க. அழகிரியும் இணையக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அழகிரி, கலைஞர் திமுக என தனிக்கட்சியை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இன்னொரு பக்கம், திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க அழகிரியை தொடர்ந்து சமாதானப்படுத்தும் இறுதி கட்ட சமரச முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் மு.க. அழகிரி இன்று சென்னை வந்து கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனவரி 3-ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவை அறிவிக்கிறேன் என்றார். இதனிடையே மதுரையில் மு.க. அழகிரியின் ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் ஹோட்டலில் ஜனவரி 3-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மு.க. அழகிரி. இதற்கான ஏற்பாடுகள், மாவட்டங்களில் இருக்கும் அஞ்சா நெஞ்சன் பேரவை நிர்வாகிகளுக்கான அழைப்புகள், திமுக அதிருப்தியாளர்களை கணக்கெடுத்தல் என பரபரத்துக் கொண்டிருக்கிறது அழகிரி அணி.