முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.. அந்த 2 பேர் மேல் ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன் எடுக்கணும்.. வெடித்த எச்.ராஜா!
மதுரை : தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர் என்றும், திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள் என்றும் பாஜக மூத்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விசிகவை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல், 11ஆம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
ஆபத்தில் இருக்கிறது
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. சீமான் தேசத்துரோகி. திருமாவளவன் பயங்கரவாதிகளின் கைக்கூலி. அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளையும் அரசியல் களத்தில் இருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் தூக்கி எறியும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்.
அனுமதி அளிக்கக் கூடாது
சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றச் செயல். 11ஆம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. டி.ஜி.பி-க்கு சைக்கிளில் செல்லவே நேரம் சரியாக உள்ளது. தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது.
திருந்துங்க.. இல்லைனா திருத்தப்படுவீங்க
பயங்கரவாதி யாசின் மாலிக்கின் நண்பர் சீமான். திருமாவளவன் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாட்டில் பேசி இருக்கிறார். அதனால், தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். திருந்துங்கள், இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.
சுயமாக சிந்திக்கத் தெரியாது
காலை உணவு திட்டம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பிரதான திட்டம். அதில் இருந்து காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துவிட்டு இந்தத் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக கருத்து திருடர்கள் திமுகவினர் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு சுயமாக சிந்திக்க தெரியாது.
வெற்றிமாறன் - ராஜராஜ சோழன்
சைவம், வைணவம் உள்ளிட்ட எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் அத்தனையும் இந்துதான். இந்து தேசத்தில் உருவான மதங்கள் அனைத்தும் இந்து மதமே. ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் கட்டினார் என வெற்றிமாறன் விளக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ராஜராஜ சோழன் இந்து தான்." எனப் பேசியுள்ளார்.
அகடவிகடம் தெரியாது
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், "ஸ்டாலினுக்கு நிறைய பேர் கொம்பு சீவி விடுவார்கள். பாவம் ஸ்டாலின் அப்பாவி. அவர் என் நண்பர் தான். அவருக்கு அகட விகடம் தெரியாது. அடுத்தவர்கள் கொம்பு சீவி விட்டால் சரி என்று சிலுப்பி பார்ப்பார்" எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.