குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார்.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்!
மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார்.
தாகத்தில் தமிழகம்.. ஊற்று நீரை நம்பி வாழும் மக்கள்.. ஒரு குடம் நிரம்ப 4 மணி நேரம் காத்திருப்பு
ஜல்லிக்கட்டு
அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
அப்போது முதல்வராக இருந்த நான் உடனே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஒரே நாளில் 4 துறைகளிடம் அனுமதி பெற்று திரும்பினேன். தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா கடந்த சில வருடங்களாக தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் துடிக்கிறார்
மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க.வை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மு.க. ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராகத் துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
மாமூல் கேட்கும் பழக்கம்
பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் தி.மு.கவினரின் அக்கிரமம் தற்போதும் தொடர்கிறது. மாமூல் கேட்கும் பழக்கம் இன்னும் திமுகவை விட்டு விலகவில்லை.
மக்களைப் பற்றி சிந்திக்கும்
காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் வெற்றி தேடித்தந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எப்போதும் மக்களுக்கான ஆட்சி மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க.
நல்ல தீர்ப்பு
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். எஜமானர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு நல்ல தீர்ப்பை தர வேண்டும்.
ஆட்டவோ அசைக்கவோ முடியாது
தமிழகத்தில் எந்த பகுதியிலும் சாதி, மத கலவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. புயல், பூகம்பம் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின் போது பேசினார்.