கலைஞர் பிறந்த நாளன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்... உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
மதுரை: ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இடைத்தேர்தலின் வெற்றியை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் நகர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
டெட்பாடியின் ஆட்சி
இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து, விரகனூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்கு தான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடப்பதாக, உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசினார்.
நம்புகிறேன்
அதன்படி, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அதன் மூலமாக நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது என்றார்.
வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
சென்ற மாதம் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஒரு முடிவெடுத்தீர்கள். அதுபோல, இந்த மாதம் ஒரு முடிவெடுத்து இங்குள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கோமா நிலையில்
முன்னதாக, 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாக விமர்சித்தார்.