நடிகை திருமணத்திற்கு வர பிரதமருக்கு நேரமிருக்கு.. கஜா புயல் பாதித்த தஞ்சைக்கு வர முடியலை.. டி.ஆர்
மதுரை : நடிகையின் திருமணத்திற்கு செல்லும் பிரதமருக்கு கஜா புயலால் பாதித்த தஞ்சைக்கு வர நேரமில்லை என்று பிரபல இயக்குநரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனருமான டி.ஆர்.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது கஜா புயல். டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமே பாதிக்கப்பட்டது. விவசாயம், பொருளாதாரம் என்று முற்றிலும் கையறு நிலையில் டெல்டா மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிடுவதும், விரட்டி அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறின. உலக தமிழ் மக்கள் இன்றளவும் தம்மால் இயன்றதை செய்து வருகின்றனர். அரசு தரப்புடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் நிவாரண பணிகளில் கைகோர்த்துள்ளன.
இந்நிலையில் நடிகையின் திருமணத்திற்கு செல்லும் பிரதமர் கஜா புயலால் பாதித்த தஞ்சைக்கு வர நேரமில்லை என்று பிரபல இயக்குநரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனருமான டி.ஆர்.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாளை கீழக்கரையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஸ்டாலின் என்னை கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. அதை நான் மறந்து விட்டேன்.. அதை எனக்கு மறக்க தெரியும்.
இரட்டை இலையை வைத்து அரசியல் செய்கிறார்களா அல்லது இரட்டை இலையை இயக்குகிறார்களா என்பது தெரியவில்லை. தட்டிக் கேட்க கூடியவர்கள் பயப்படுகிறார்கள். கஜாபுயலினால் பல தென்னை மரங்கள் நாசமாகி போய்விட்டது.
தஞ்சை மாவட்டம் டெல்டா மாவட்டம் சோற்றுக்கும். ரொட்டிக்கும் தற்போது சிரமப்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை கொண்டு மத்திய அரசு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.
மத்திய அரசு ஏன் பாரமுகம் காட்டுகிறது? கஜாபுயலுக்கு நிவாரணம் வழங்க ஏன் தமிழகத்தை புறக்கணித்து வருகிறீர்கள்? தற்போது மோடி ஓட்டு கேட்டு ஜனவரியில் தமிழ்நாடு வருகிறார். நடிகைகளின் திருமணத்திற்கு செல்லக் கூடிய பிரதமர் ஏன் தமிழகத்திற்க்கு வர மறுக்கிறீர்கள்?
அதிமுக தலைமை சரியில்லாமல் இருந்தும் எடப்பாடி அரசு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி உள்ளே வெளியே என வாழ்த்து வருகிறது. கஜாபுயலுக்கு நிவாரான நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்க மறுக்கிறது எதிர்கட்சி.
மக்கள்கள் போராடும் நிலையில் இல்லை..போராடினால் அரசுக்கு புரியும். கமலஹாசன் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். அரசியலுக்கு வராதா ரஜினிக்கு பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.