ஆகாரம் கொடுத்த அகரம்.. ஓடோடி வந்து உதவிய சூர்யா.. மெய் சிலிர்த்து புகழ்ந்த எம்பி.. நெகிழ்ச்சி!
மதுரையில் உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு நடிகர் சூர்யா உதவி செய்ததற்கு மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரையில் உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு நடிகர் சூர்யா உதவி செய்ததற்கு மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் பலர் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முக்கியமாக தினசரி ஊதியத்தை நம்பி இருக்கும் மக்கள் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல பகுதிகளில் மக்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமத்தா இப்படி உட்கார்ந்திருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முருகன்தான்.. நோயுடன் போராடும் பரிதாபம்!
உதவி செய்கிறார்
இதுபோல் உணவு இன்றி கஷ்டப்படும் மக்களுக்கு மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் உதவி செய்து வருகிறார். இதற்காக அவர் அன்னவாசல் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். தினமும் உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சு வெங்கடேசன் குழு உணவு வழங்கி வருகிறார்கள். முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் தவறாமல் இதை அவர் செய்கிறார்கள்.
சூர்யா உதவி
தினமும் 4500 பேருக்கு சு வெங்கடேசன் இப்படி உதவி செய்கிறார். அதே சமயம் இதற்காக சு வெங்கடேசன் இணையத்தில் உதவியும் கேட்டு இருந்தார். இதில் உதவி செய்ய விரும்பும் நபர்கள் உதவலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இதற்காக 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். தனது சொந்த வருமானத்தில் இருந்து 5 லட்சத்தை கொடுத்து இருக்கிறார்.
பாராட்டி உள்ளார்
சூர்யாவின் இந்த செயலை தற்போது சு வெங்கடேசன் மெய் சிலிர்த்து புகழ்ந்து பாராட்டி உள்ளார். அதில் அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ஐந்து லட்சம் நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றி. நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த சூர்யாவிற்கு நன்றி.
அகரம் கொடுத்த ஆகாரம்
"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன, என்று சூர்யாவை சு வெங்கடேசன் புகழ்ந்துள்ளார்.