எந்தப் பக்கம் போவது.. எல்லாப் பக்கமும் அணை கட்டும் கோஷ்டிகள்.. தத்தளிக்கும் நயினார் நாகேந்திரன்
மதுரை: ராமநாதபுரத்தில் பாஜகவினரின் உள்ளடி வேலைகளால் அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் கரையேறுவது கடினம் என்று கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முக்குலத்தோரும் முஸ்லிம்களும் கணிசமாக வாழ்கின்றனர். இங்கு அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தது. ஆனால் தொகுதி முழுவதுமே அதிமுகவினரின் கடுமையான கோஷ்டிப் பூசலால் கழகம் "கலகமாக" உள்ளது. இதனால் அதிமுக புத்திசாலித்தனமாக ராமநாதபுரத்தை கூட்டணி கட்சிக்கு தள்ளி விட்டு விட்டது. அப்படித்தான் இந்த தொகுதி பாஜக வசம் சென்றது.
ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்ற செய்தி அறிந்ததுமே இந்த தொகுதியை கைப்பற்ற பாஜகவுக்குள் கடும் போட்டி நிலவியது. ராமநாதபுரத்துக்காரரான பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் குப்புராமு, புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பு முருகானந்தம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் இங்கு போட்டியிட அதிக முனைப்பு காட்டி வந்தனர்.
பொன் ராதாவின் ஆசி
இதில் குப்பு ராமு ஏற்கனவே பாஜக வேட்பாளராக இங்கு களம் கண்டு தோல்வியை தழுவியவர். கருப்பு முருகானந்தம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாவின் பரிபூரண ஆசி பெற்றவர். நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து சமீபத்தில் பாஜகவுக்கு வந்தவர். பணபலமும் படை பலமும் மிக்கவர். இவர்களுக்கு இடையிலான இந்த போட்டியில் கடைசியில் பொன் ராதாவின் லாபியையும் தாண்டி டெல்லி லாபி மூலமாக நயினார் ராமநாதபுரத்தை பெற்றுவிட்டார்.
நாகேந்திரன் வசம் டிக்கெட்
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அப்போது பாஜகவில் இருந்த அவர் அந்த தேர்தலில் 1,28,322 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளாராக போட்டியிட்ட மாநில துணைத் தலைவர் குப்புராமு 1,71,082 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு இப்போது இருப்பது போன்ற மகா, மெகா கூட்டணிகள் எதுவும் இல்லை. ஆனால் நிலைமை இப்போது வேறு மாதிரி உள்ளதால் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணம் பாஜகவினருக்கு உள்ளது. ஆகவேதான் இம்முறை எப்படியும் போட்டியிட சீட் வாங்கிவிட வேண்டும் என மூவரும் முட்டி மோதி வந்தனர் இதில் இறுதியாக நயினார் வென்று விட்டார்.
வெடித்தது வில்லங்கம்
நயினார் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகுதான் வில்லங்கமே ஆரம்பித்துள்ளது. நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்துக்கு சம்பந்தம் இல்லாத வெளிமாவட்டத்தை சேர்ந்தவர். இந்த காரணத்தால் ராமநாதபுரம் பாஜகவினர் அவருக்கு முழு அளவில் ஆதரவளிக்கவில்லை. தொகுதி முழுவதுமே இப்படிப்பட்ட நிலைமைதான் நீடித்து வருகிறது. இந்த நிலைமையை கண்ட நயினார் நான் வெளிமாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் எம்.ஜி.ஆர் போன்று வென்று காட்டுவேன் என்று கூறியிருக்கிறார். இதை அதிமுகவினர் ரசிக்கவில்லை. இருந்தாலும் தான் அமைச்சராக இருந்தபோது தன்னோடு தொடர்பில் இருந்த அதிமுகவினரோடு இப்போதும் நல்ல தொடர்பிலேயே உள்ளார். இது ஒருபுறம் என்றால் கட்சியின் சீனியரும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாவின் ஆதரவாளருமான கருப்பு முருகானந்தம் சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ளார். இதனால் இவரது ஆதரவாளர்கள் நயினாருக்கு தேர்தல் வேலைகள் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
அமைச்சர் ஆவேன்
இந்த தொகுதியில் தான் வென்று விட்டால் எப்படியும் மத்திய அமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறிவருகிறார் நயினார். இது கட்சியின் சீனியர்கள் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்கள் ராமநாதபுர தாமரை கட்சியினர். இதனால் அந்த சீனியர்களின் கண்ணசைவுப் படி உள்ளூர் பாஜகவினர் ராமநாதபுரத்தில் இப்போதே சில உள்ளடி வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் ராமநாதபுரத்து வாக்காளர்களின் தீர்ப்பு பண்ணையார் (நயினார் நாகேந்திரன், நெல்லையில் நயினாரை அப்படித்தான் அழைப்பார்கள்) பக்கம் வருவது சிரமம்தான் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்