ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டம்.. தங்கை நிரஞ்சனாவும் கைது
Recommended Video
மதுரை: தந்தை ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அவரது தங்கை நிரஞ்சனாவும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. இவர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் நந்தினி வாதாடினார். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நடத்துவதாக இருந்த நிலையில் அவர் தற்போது வரை சிறையில் உள்ளார்.
நீதிமன்றம் குறித்து எத்தனை பேர் தரக்குறைவாக பேசிவிட்டு வெளியே இருக்கும் நிலையில் நந்தினியையும் தந்தை ஆனந்தனையும் மட்டும் கைது செய்தது ஏன் என கட்சித் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தனது சகோதரியையும் தந்தையையும் விடுவிக்கக் கோரி நந்தினியின் தங்கையும் சட்டக் கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா நீதிமன்றம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார்.
போராட்டத்திற்கு அவர் தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரை அவரது வீட்டுக்கே சென்று போலீஸார் கைது செய்தனர்.