மதுரையில் நெகட்டிவ் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.. சரவணன் எம்எல்ஏ தரப்பு வாதம்
மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனாவிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தாமாக முன்வந்து ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் அவர்களும் ஒரு பிரதிவாதியாக சேர்க்க அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் அதனை ஏற்றது. அவ்வழக்கானது இன்று (04.08.2020) நீதிபதி .சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவர் அமர்வில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரவணன் சார்பாக வழக்கறிஞர் செந்தில்குமார் வாதாடினார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக கொரோனாவிற்கான பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதற்கு 4 முதல் 5 நாட்கள் வரை ஆகின்றது என்று குற்றம் சாட்டினார். மேலும், பரிசோதனைக்கான முடிவு பாசிட்டிவ் என்றால் தொலைபேசியில் மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும், நெகட்டிவ் என்றால் அதற்கான முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. அம்முடிவுகளுக்கான Softcopy or Hard copy எதனையும் நோயாளிகளுக்குத் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கொரோனா பரிசோதனைக்கான முடிவுகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். உடனடியாக நீதிபதி, அங்குள்ள நீதிமன்ற பணியாளர் ஒருவரின் பரிசோதனை முடிவை இணையதளத்தில் சென்று சரிபார்க்கும்படி கூறினார். ஆனால் அவருக்கான கொரோனா பரிசோதனை முடிவு அதில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு
மேலும் வாதாடிய வழக்கறிஞர் பரிசோதனை முடிவில் RT-PCR அறிக்கையில் Ct Value எவ்வளவு என்ற நிலை தெரிந்தால் மட்டுமே நோயின் தீவிரத்தை அளவிட முடியும். ஆனால் அதனை பரிசோதனை முடிவில் குறிப்பிடுவது இல்லை. மேலும் கொரோனா மருத்துவக் கழிவு மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல்லில் திறந்த வெளியில் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நோய்தொற்று அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இதனை முறையாக மருத்துவக் கழிவு இயந்திரம் (Incinerator) மூலம் மட்டுமே எரிக்கப்பட வேண்டும் அல்லது 12அடி ஆழம் தோண்டி (Land Filling) புதைக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.
நீதிபதி கொரோனாவிற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு கூறினார். ஏற்கனவே, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் ரூ1½ கோடி நிதியை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (04.08.2020) விசாரணை முடிவில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க மூன்று வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.