தீவிரவாதிகளுடன் தொடர்பு?... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை
மதுரை: தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட முகமது ஷேக் என்பவரை மதுரை அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த மாதம் 12ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. உடனடியாக, நேரில் சென்று விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்தனர். கோவையை தொடர்ந்து, மதுரையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரில், முகமது ஷேக் என்பவரை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, கேரள தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், டெல்லி விமான நிலையம் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.