கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
மதுரை: கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல்களுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர்.
300-க்கும் மேற்பட்டோர் பலி
இந்த குண்டுவெடிப்பு குறித்து இந்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்தது. எனினும் இலங்கை அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் கண்காணிப்பு
இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்திய என்ஐஏ அதிகாரிகள் அந்த இளைஞர்களை கண்காணித்து வந்தனர்.
அக்பர்
கோவை போத்தனூரை சேர்ந்த சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா, உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அசாரூதின், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், உக்கடம் அல்அமின் காலனியை சேர்ந்த இதயத்துல்லா, ஷாகிம்ஷா ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை கடந்த 12-ஆம் தேதி நடந்தது.
4 பேர் கைது
அசாரூதின், இதயதுல்லா, அபுபக்கர் சித்திக் ஆகியோர் வீடுகள், நிறுவனத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனையின் முடிவில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை
இந்த நிலையில் கோவை போல் மதுரையிலும் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை
இந்த சோதனையில் வில்லாபுரம் சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் ஏற்கெனவே 7 இடங்களில் சோதனை நடந்த நிலையில் தற்போது மதுரையிலும் சோதனை நடைபெற்றது.