நிர்மலாதேவிக்கு ஏன் ஒரு வருடமாக ஜாமீன் தரலை.. பெரிய இடத்து தொடர்பு இருக்கா.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி
நிர்மலாதேவி வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: "ஒரு வருஷம் ஆக போகுது.. ஏன் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் இன்னும் வழங்கப்படவில்லை.. அவர் என்ன சூப்பர் குற்றவாளியா?" என்று மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அத்துடன் நிர்மலாதேவி வழக்கு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரணை நடத்தவும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
ஜாமீன்
அப்போது நீதிபதிகள், தெரிவித்ததாவது: "நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை முழு திருப்தியாக இல்லை. வழக்கை முறையாக விசாரிக்காமல் மூவரை மட்டுமே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஓராண்டாக நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்?
பெரிய இடத்து தொடர்பு?
கொலை குற்றவாளிகளுக்கு கூட ஜாமீன் கிடைக்கும்போது, நிர்மலா தேவிக்கு ஒரு வருஷமாக ஜாமீன் தர மறுப்பது ஏன்? அவர் சூப்பர் குற்றவாளியா ? ஜாமீன் வழங்குவதில் உள்ள எதிர்ப்பை பார்க்கும் போது பெரிய இடத்து தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுவது இயற்கைதான்.
சரமாரி கேள்வி
ஏன், அவருக்கு ஜாமீன் வழங்குவதில் ஏதாவது அச்சம் உள்ளதா? வழக்கை நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேரை மட்டும் வைத்து முடிக்க திட்டமா என்ற சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர், நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை
மேலும் இது சம்பந்தமாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18-க்கு ஒத்திவைத்தனர்.