ஜாமீன் கிடைத்தும் சிறையில் வாடுகிறார் நிர்மலா தேவி… தாமதம் ஏன்?
மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, நிர்மலாதேவிக்கு, 11 மாத சட்டப்போராட்டத்திற்கு பிறகு கடந்த 12-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமீனுக்கான ஆவணத்தில் ரத்த சொந்த உறவுகள் மற்றும் நண்பர்கள் கையெழுத்திட முன்வராததால் சிக்கல் ஏற்பட்டது.
நிர்மலா தேவியின் தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில், அவரது சகோதரர் பெயரில் வீட்டு வரி ரசீது இல்லாததால் ஜாமீன் ஆவணங்கள் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, குடும்ப நண்பர் ஒருவர் ஜாமின் உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளதாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடைமுறைகளெல்லாம் முடிந்த பின்பு, வருகிற 19ஆம் தேதி நிர்மலாதேவி மதுரை சிறையிலிருந்து வெளியே வருவார் என அவர் கூறினார்.
மேலும், நிர்மலாதேவிக்கும், அவருக்கு உதவி செய்பவர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை மிரட்டல் விடுப்பதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.