நான்சென்ஸ்... இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்ல - செய்தியாளர்களிடம் கடுகடுத்த பிடிஆர்
மதுரை: ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுபோன்ற நான்சென்ஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் கிடையாது எனக்கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள்: ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பதில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
பிடிஆர்: நேற்று இருந்த சூழலுக்கும் இன்றைய சூழலுக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. நேற்று வரை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை நிலையில்தான் இருந்தது. இன்று அதை உறுதிபடுத்தி இருக்கிறார்களே தவிர இருந்த உரிமையை பறிக்கவில்லை. இல்லாத உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை.
செய்தியாளர்கள்: ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரையை அப்படியே தானே நாம் ஏற்று வருகிறோம்?
பிடிஆர்: ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது சட்டத்திற்காகவா? விருப்பத்திற்காகவா? என்பது இனிதான் தெரியும். தற்போது உச்சநீதிமன்றம் விருப்பம் இருந்தால் ஏற்கலாம் என்று தெளிவாக சொல்லிவிட்டது.
செய்தியாளர்கள்: நேற்றும், இன்றும் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்புகளின் மூலமாக மத்திய அரசு இனிமேல் தன்னுடைய மனநிலையையும் நடவடிக்கைகளையும் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? மாநில அரசுகளுக்கு முழுமையான அதிகாரத்தை தருமா? அல்லது இதேபோல் வழக்குகளை தொடர்ந்துதான் சரி செய்ய வேண்டுமா?
பிடிஆர்: மற்றொருவரின் மனதில் என்ன உள்ளது என்பதை யாரால் சொல்ல முடியும்? நான் தெளிவாக கூறுகிறேன். பல ஆண்டுகளாக மாநில உரிமைகள் தொடர்பாக சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்தாலும் நிலுவையில் விசாரணை நடக்காமல் இருந்து வந்த சூழலில், தற்போது அடுத்தடுத்து மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்திருக்கிறது என்றால், இது மாநில உரிமைக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முதலமைச்சரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.
செய்தியாளர்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது தமிழ்நாடு அரசின் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதே கருத்துள்ள மற்ற மாநிலங்களுடன் இணைந்து அடுத்தடுத்த முன்னெடுப்புகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பிடிஆர்: இந்த தீர்ப்பு எந்த வகையிலும் திசைதிருப்பும் ஒன்றாகவோ, இருந்த சூழலை மாற்றும் வகையிலான தீர்ப்பாகவோ நான் காணவில்லை. சட்டமைப்பு செல்லும் என்றுதான் இந்த தீர்ப்பு சொல்கிறது. இதுவே நமக்கு இவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது என்றால் நாடு எந்த சூழலில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஜி.எஸ்.டியை பொறுத்தவரை கொரோனாவுக்கு முன்பாகவே வளர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நடக்கவில்லை. ஜி.எஸ்.டி.யால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
செய்தியாளர்: மத்திய அரசாக இருக்கட்டும், மாநில அரசாக இருக்கட்டும், ஜி.எஸ்.டி. வரி இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு... (கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டார்.)
பிடிஆர்: இதுபோன்ற நான்சென்ஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் கிடையாது. வருடத்துக்கு வருடம் பொருளாதாரம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. வருடத்துக்கு வருடம் பணவீக்கம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. வருடத்துக்கு வருடம் எல்லா எண்களும் உயர்ந்துகொண்டு இருக்கின்றன. அறிவிருந்தால் உற்பத்தி சதவீதத்தை சொல்லி பணவீக்கம் ஏன் வளர்ந்தது என்று சொல்ல வேண்டும். எல்லாமே எல்லா நேரமும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
எல்லா வருடமும், எல்லா காலமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உற்பத்தி ரூ.2 லட்சம் கோடி. இன்று ரூ.23 லட்சம் கோடி. இதைவைத்து நான் சிறந்தவன் என்றா சொல்ல முடியும். அதுதான் வளர்ச்சி, பணவீக்கத்தின் விளைவு. எனவே நான்சென்ஸ் எண்களை என்னிடம் சொல்லாதீர்கள். பயனனுள்ளவற்றை கேளுங்கள்.
செய்தியாளர்கள்: நேற்றும் இன்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் சுட்டிக்காட்டும் விசயம் என்ன?
அந்த அளவுக்கு பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. என் மனதில் இருப்பதை நான் சொல்கிறேன். ஜனநாயகத்துக்கு, மக்களுக்கு முக்கியமான கேள்விகள் நீதிமன்றங்களில் விசாரணை இல்லாமல் முடிவு இல்லாமல் நிலுவையில் உள்ள நிலையில், இந்த 2 தீர்ப்புகள் ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் தெளிவு ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து 2 நாட்களில் வந்தது ஜனநாயகத்துக்கு மகிழ்ச்சிதரும் நல்ல விளைவாக கருதுகிறேன்.