டாக்டருக்கு பதிலாக பொருளாதாரம் படிச்சவருக்கு வேலை.. இது மதுரை அரசு மருத்துவமனை கூத்து
மதுரை:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் மருத்துவர் இருக்க வேண்டிய இடத்தில் பொருளாதாரம் படித்தவருக்கு பணி வழங்கியது எப்படி என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பலகோடி நிதி ஒதுக்கீடு
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகம் சரியாக மேற்கொள்வதில்லை.கண்காணிப்பில்லாத ரத்த வங்கிகள்
இப்போது சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தி உள்ளனர். ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. மருத்துவ துறையினரின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் 2014 முதல் 2017 வரை பல லட்சம் யூனிட் ரத்தம் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.
உரிமத்தை ரத்து செய்க
2014 முதல் 2016 வரை நாடு முழுவதும் தவறாக ரத்தம் செலுத்தப்பட்டதால் 2,234 பேருக்கு எச்.ஐ.வி. பரவியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விவரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
தகுதி இல்லாதவர்கள் ஏன்?
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் கூறுகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி? எம்பிபிஎஸ் படித்தவருக்கான பணியில் மதுரை மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் பொருளாதாரம் படித்தவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. உயிர் பாதுகாப்பு பணிகளில் தகுதி இல்லாதவர்களை நியமிப்பதா என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். வரும் 8ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.