வாடி வாசல் நாயகனே... சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் நோட்டீஸ்... மதுரையில் பரபரப்பு!
மதுரை: மதுரையில் வாடி வாசல் நாயகனே என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு இழுக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலாமாக பர பரப்பான பேச்சுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி வருபவர் நடிகர் சூர்யா. இதற்குக் காரணம் அவர் அரசியல் வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு எதிரான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் நீட் தேர்வு நடக்கவிருந்த நிலையில் 24 மணி நேரத்தில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது பெரிய அளவில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மனசாட்சி
இதையடுத்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா, ''நீட் தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்' சொல்வதைப் போன்ற அவலம் எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது'' என அறிக்கையின் ஒரு பகுதியில் சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
வேறு நடிகர்கள்
இவரது இந்த அறிக்கைக்கை ஆதரவும், ஈதிர்ப்பும் பெருகியது. எந்த நடிகர்களும் இவ்வளவு காரசாரமாக நீட் தேர்வை விமர்சிக்கவில்லை. ஆனால், சூர்யா தனது கருத்தை தெளிவாக முன் வைத்து இருந்தார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
பாஜக விமர்சனம்
ஆனால், சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவு பெருகியது. பாஜக போன்ற சில கட்சிக்ளைத் தவிர மற்ற கட்சிகளும் சூர்யாவின் அறிக்கையை வரவேற்று இருந்தது. இதற்கும் முன்பு தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்து தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதற்கும் இவரை பாஜக விமர்சனம் செய்து இருந்தது.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் சம்பவம், தூத்துக்குடி சம்பவம், விவசாயிகள் பிச்சனை என்று எதுவாக இருந்தாலும் நடிகர் சூர்யா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இந்த நிலையில்தான் மதுரையில் இவரை அரசியலுக்கு இழுத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
வருவாரா
அந்த நோட்டீசில், 'மதுரையில் வாடி வாசல் நாயகனே என்று வாசகம் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு இழுக்கிரார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், சூர்யா இதுவரை அரசியலுக்கு வருவது பற்றி எங்கும் பேசியது இல்லை.