ஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்
மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சாடியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கிடைக்கும் கேப்பில் எல்லாம் விளாசி வருகிறார் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன். ஓபிஎஸின் வாரணாசி பயணத்தை விமர்ச்சித்து சர்ச்சையாக்கினார்.
அதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஓபிஎஸ் தனது குடும்பத்தோடு பாஜகவில் இணைவார் என்று கூறி குண்டைத் தூக்கிபோட்டார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஓபிஎஸ் அமைதிகாக்க வேண்டும்
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் அதிமுக என்பது அமமுக தான், தொண்டர்கள் அமமுக பின்னால் உள்ளனர், அதைபுரிந்துகொண்டு ஓபிஎஸ் அமைதி காக்க வேண்டும்.
தமிழிசைக்கு பைபை.. தமிழக பாஜகவிற்கு விரைவில் புது தலைவர்.. ரேஸில் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன்!
அமமுகவின் கோட்டை
திருப்பரங்குன்றம் அமமுகவின் கோட்டை, அமமுகவை பார்த்து ஈபிஎஸ் ஓபிஎஸ் பயப்படுவது ஏன்? வாக்குபதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து அமமுகவை பார்த்து திமுக அதிமுக அஞ்சுகிறது, ஈவிஎம் இயந்திரத்தை மாற்றுவதற்கான முயற்சி நடந்தாலும் அதை ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.
மகனுக்கு மட்டும் வாய்ப்பு
ஓபிஎஸ் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவர் அம்மாவிற்கு எதிராகவே தேர்தல் வேலை பார்த்தவர். ஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி, ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்களுக்கு எதையும் செய்யவில்லை. மகனுக்கு மட்டும் வாய்ப்பு வாங்கி தருகிறார்.
ஏன் பதில் இல்லை?
அதிமுக தொண்டன் காவி வேட்டி கட்டிகொண்டு பாஜகவோடு சேர்ந்திருப்பதை ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஓபிஎஸ் வாரணாசி விவகாரத்தில் ஏன் ஈபிஎஸ் பதில் அளிக்கவில்லை, பொள்ளாச்சி விவகாரத்தில் ஏன் பதில் அளிக்கவில்லை?
சந்தேகமாக உள்ளது
மக்கள் புரிந்துகொண்டு அமமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே அமமுகவிற்கு ஆதரவு தருகின்றனர். வாக்குபதிவு முடிந்தபின் முன்னுபின் முரணாக அதிமுக, திமுகவினர் தாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து மாற்றி மாற்றி பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நம்பிக்கையை இழக்கிறது
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் வழங்குவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகளாக மாநில ஆட்சியின் அதிகாரிகளே உள்ளனர் என்பதால் நம்பகத்தன்மையை இழக்கிறது. இவ்வாறு தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.