இப்படி ஒரு கேள்வியை எப்படி கேட்கலாம்.. பிரஸ் மீட்டில் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் கடும் கோபம்
மதுரை: திருமங்கலத்தில், நிருபர் கேட்ட ஒரு கேள்வி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெகுவாக கோபப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணிகளை பார்வையிட, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான, ஓ.பன்னீர் செல்வம், நேற்று சென்றார். அப்போது திருமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஓபிஎஸ்.
பன்னீர் செல்வத்திடம், பேட்டி கண்ட நிருபர்களில் ஒருவர், கேட்ட அந்த கேள்வி, ஒரு நிமிடம், பன்னீர் செல்வத்தை ஷாக்காக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
எப்போது கவிழப் போகிறது எடப்பாடி அரசு?
முட்டாள்த்தனம்
நீங்கள் பாஜகவில் இணையப்போவதாக தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளாரே..? என்பதுதான் அந்த கேள்வி. ஒரு சில வினாடிகள், இந்த கேள்வி ஏற்படுத்திய அதிர்வலைகளை ஓபிஎஸ் முகத்தில் பார்க்க முடிந்தது. கோபமடைந்த அவர், அது முட்டாள்த்தனமான குற்றச்சாட்டு, கேள்வி என்றார். ஆனால் மீண்டும் அதே நிருபர் அதே கேள்வியை கேட்க, அதற்குத்தான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேனே என்று டென்ஷன் ஆனார் ஓபிஎஸ்.
தூண்டிவிட்டார்களா
மேலும், அந்த நிருபரை பார்த்து, யார் தூண்டிவிட்டு, இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள்? என்று பதில் கேள்வி கேட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் கோபப்பட்டதால், அருகேயிருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், அந்த நிருபரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.
வாக்குவாதம்
அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே ஓபிஎஸ்தான். அவர் வேறு கட்சிக்கு மாறுவாரா? இப்படி ஒரு கேள்வியை எப்படி கேட்கலாம்? சிண்டு முடிவது, கீழ்த்தரமான கேள்வியை கேட்டு தரத்தை குறைத்துக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று, கடிந்து கொண்டார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், மதுரையில் மட்டும்தான் நிருபர்களிடம் இப்படியெல்லாம் கேள்விகள் வருகிறது. வேறு எங்கும் இந்த பிரச்சினை கிடையாது என்று சலித்துக் கொண்டார்.
வாரணாசியில் ஓபிஎஸ்
வாரணாசியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதில் பங்கேற்க தனது மகன் ரவீந்திரநாத்துடன், ஓபிஎஸ் வாரணாசி சென்றார். இதுகுறித்து தங்கத் தமிழ்ச் செல்வன் கருத்து கூறுகையில்தான், ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போகிறார். ராஜ்யசபா எம்பி பதவியை தனது மகனுக்கு கேட்கப்போகியிருக்கிறார் என்று கூறியிருந்தார்.