பிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா?
மதுரை: பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை பாட்டி தனது கையால் முகத்தை மூடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன் தினம் நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.
குழந்தை இறப்பு
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையின்படி மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம்
பின்னர் உத்தப்பநாயகன்னூர் போலீஸார் குழந்தையின் பெற்றோர் சின்னச்சாமி- சிவப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் மூக்கை பிடித்து அழுத்தி தலையணை வைத்து அழுத்தியும் பாட்டி நாகம்மாள் கொலை செய்தது தெரியவந்தது.
பாட்டி நாகம்மாள் கைது
நாகம்மாள் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பெற்றோருக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பெண் குழந்தை என்பதால் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.