பாலமேடு ஜல்லிக்கட்டு.. 3 காளைகளுக்கு பரிசு, சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு
மதுரை:மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. மாடுகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என பெயர் பெற்ற, பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8.15 மணிக்கு துவங்கியது. ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை துவக்கினார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 988 காளைகள் களமிறக்கப்பட்டன.
855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 848 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகி களமிறங்கினர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. போட்டியின் போது மாடுகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
போட்டியில் 3 காளைகள், சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டன. அதிக பட்சமாக 10 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரர் என்ற பரிசை தட்டிச் சென்றார். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, 1,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.