ராஜராஜ சோழன் பற்றி வரலாற்று புத்தகங்கள் சொல்வதையே பேசினேன்.. நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் வாதம்
Recommended Video
மதுரை: வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில்தான், ராஜராஜ சோழன் பற்றி கருத்து கூறியதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை கடுமையாக விமர்சித்தார். தலித்களின் நிலத்தை பறித்தவர் ராஜ ராஜ சோழன்தான் என்றும் குற்றம்சாட்டினார் பா.ரஞ்சித்.
அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது நடவடிக்கைக்கு அஞ்சிய ரஞ்சித், முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி, ராஜமாணிக்கம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதற்காக ராஜராஜ சோழன் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் வந்தது என்பது உட்பட பல சரமாரி கேள்விகளை, நீதிபதி முன் வைத்தார். இதற்கு பதிலளித்த ரஞ்சித் தரப்பு, பல்வேறு வரலாற்று புத்தகங்களில் குறிப்பிட்டதையே நான் குறிப்பிட்டேன் என்று வாதம் முன் வைத்தது.
மக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா..? பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி
சமூக வலைத்தளங்களில் எனது பேச்சு திரித்து வெளியிடப்படுகிறது என்று ரஞ்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி குறுக்கிட்டு, பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும்போது, மக்கள் போற்றும் மாமன்னன் பற்றி இப்போது பேசுவதற்கு என்ன வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பிறகு வரும் 19ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ரஞ்சித்தை கைது செய்ய நீதிபதி இடைக்கால தடை விதித்தார். முன்னதாக ரஞ்சித்துக்கு, முன் ஜாமீன் கொடுக்க கூடாது என்று, அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.