மாண்புமிகு அம்மா.. நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரித்த ஒபிஎஸ்.. அமமுகவின் பெயர் சொல்ல மறுப்பு
மதுரை: மாண்புமிகு அம்மா.. நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரித்த இன்று வரை பிரச்சாரம் செய்து வரும் துணை முதல்வர் ஒபிஎஸ், தினகரனின் அமமுகவின் பெயரை சொல்லி அழைக்க விருப்பமில்லை என மறுத்துவிட்டார்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வில்லாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் மின்வெட்டு இல்லாமல் மாற்றி காட்டினார். காவிரி இறுதி தீர்ப்புக்கு அரசாணையை பெற்றுத்தந்தவரும் ஜெயலலிதா தான். அதிமுக அரசுக்கு எதிராக திமுகவும், அமமுகவும் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஸ்டாலின் என்னென்னமோ வழிகளில் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.
திமுகவின் ஸ்டாலின் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார். மற்றொரு கட்சியின்(அமமுக) கொள்ளை பரப்பு செயலாளர், நாங்கள் 22 தொகுதிகளிலும் வெல்வோம் என்கிறார். வென்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்கிறார். உண்டு கொழுத்தவர்கள், எப்படி இப்படி ஒரு துரோகம் செய்கிறார்கள்.
அதிமுகவிற்கு துரோகம் செய்து கட்சியை ஆரம்பித்தவர்கள் இதுவரை உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. 32 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியை அழிக்க நினைத்தால் அதனை ஒன்றரை கோடி தொண்டர்களும் தடுத்து நிறுத்துவார்கள்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு பேசிய ஒ பன்னீர்செல்வம், ஒவ்வொரு முறையும் மாண்புமிகு அம்மா என ஒவ்வொரு வாக்கியம் ஆரம்பிக்கும் போதும் குறிப்பிட்டு பேசினார்.