சொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்!
மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிவுக்கு பிறகு நிச்சயம் குடும்பத்தோடு பாஜகவில் இணைவார் என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக மற்றும் பிரதமர் மோடியுடன் இணக்கமான உறவை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் மேற்கொண்ட வாரணாசி பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் வாரணாசி சென்றது தனது மகனுக்கு ராஜ்யசபா சீட் கேட்கதான் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன். மேலும் ஓபிஎஸ் பாஜகவில் இணைய போகிறார் என்றும் கூறினார்.
அப்பா பிரதமரானால் நல்லாதான் இருக்கும்.. அகிலேஷ் யாதவ் திடீர் ஆசை.. மாயாவதிக்கு அதிர்ச்சி
அடுக்காத புரளி
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து நான்கு பக்க அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டார். அதில் நான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக கூறுவது வடிகட்டிய பொய். பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்புகின்றனர்.
அதிமுக கொடி
அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன்.
வேதனைப்படுகிறேன்
என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன் என தெரிவித்திருந்தார்.
4 பக்க அறிக்கை ஏன்?
இந்நிலையில் மதுரையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தனது கருத்தை முட்டாள்தனமான கருத்து என்று கூறிய ஓபிஎஸ் எதற்கு 4 பக்க அறிக்கையை வெளியிட வேண்டும்?
குடும்பத்தோடு இணைவார்
ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார். ஓபிஎஸ் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவில் குடும்பத்தோடு இணைவது 100% உண்மை. தேர்தல் தோல்வி பயத்தால் தனது சொத்துக்களை பாதுகாக்க ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்.
மடியில் கனமிருந்தால்தான்..
பாஜகவில் இணைய மாட்டேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது போலித்தனமானது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என மீண்டும் அடித்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.