எய்ம்ஸ் கட்டிட்டீங்களா? ஏன் ஆபரேஷன் நடக்குதுனு கூட சொல்லுங்களேன்! பாஜகவை கலாய்த்த ப சிதம்பரம்
மதுரை: தூங்கா நகரத்திற்கு மற்றொரு பெருமையாக தேசிய தரம் வாய்ந்த 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் என பாஜக அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.
இதனையடுத்து, சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறியிருந்ததாக திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் நட்டாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்த மருத்துவமனை கட்டுவதற்கான ஆயத்த பணிகள்தான் 95 சதவிகிதம் முடிந்துவிட்டது என்று நட்டா கூறினார் என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து ப சிதம்பரம் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
"லந்து" செய்யும் மதுரை திமுக.. ஏட்டய்யா நட்டா சொன்னாரே.. அந்த எய்ம்ஸ்சை காணோம்.. போலீசில் புகார்!
ஆய்வு
நட்டாவின் இந்த பேச்சு கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் நெட்டிசன்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நல்ல கண்டென்டாக அமைந்துவிட்டது. நட்டா பேசிய அடுத்த நாளே, சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடமான மதுரை தோப்பூருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், நட்டா பேசியது உண்மைக்கு மாறானது என்று கூறியிருந்தனர்.
அது வேறு இது வேறு
இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கிணற்றை காணோம் என்று காவல்நிலையத்தில் வடிவேலு புகார் கொடுத்ததைப்போல, திமுகவினர் மதுரை காவல் நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லையென்று புகார் அளித்தனர். ஆக இப்படியாக நட்டாவின் சிறப்புரைக்கு பல சிறப்பான சம்பவங்களை பல அரசியல் கட்சியினர் செய்திருந்தனர். ஆனால், இந்த மருத்துவமனை கட்டுவதற்கான ஆயத்த பணிகள்தான் 95 சதவிகிதம் முடிந்துவிட்டது என்று நட்டா கூறினார் என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சம்பவம்
தற்போது இந்த பஞ்சாயத்துக்கு நடுவில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டீவிட் நட்டாவின் சிறப்புரைக்கு சம்பவம் செய்துள்ளார். அவர் ட்வீ ட்டில் பதிவிட்டுள்ளதாவது, "மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?" என்று கூறியுள்ளார்.
மருந்தகம் கூட
மேலும், "பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். நட்டாவின் பேச்சு தொடர் சம்பவமாக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவர்கள் இனி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.