பாலக்காட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி மதுரையில் கைக்குழந்தையுடன் மீட்பு - கணவர் தலைமறைவு
கேரளாவில் மாயமான சிறுமியை மதுரையில் 4 மாத கைக்குழந்தையுடன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அந்த சிறுமியை அழைத்து வந்த நபர் காவல்துறையினரின் கைதுக்கு அஞ்சி தலைமறைவாகி விட்டார்.
மதுரை: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகளை கைக்குழந்தையுடன் பார்த்தால் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்? மதுரையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் மாயமான சிறுமியை மதுரையில் கைக்குழந்தையுடன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். சிறுமியை அழைத்துக்கொண்டு வந்த நபர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற ஊர் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற வாலிபர் கடந்த 2019ஆம் ஆண்டு அழைத்துக்கொண்டு வந்து விட்டார்.
சிறுமியைக் காணாமல் தவித்த பெற்றோர் கொழிஞ்சம்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான சிறுமி மதுரையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மதுரைக்கு வந்த பாலக்காடு மாவட்ட காவல்துறையினர் கைக்குழந்தையுடன் இருந்த சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்தனர். வயதைப் பற்றி விசாரிக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறினர்.
செல்வத்தின் தயாருடன் வசித்து வந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர். கேரளாவில் வேலை செய்த போது சிறுமியை காதலித்த செல்வம் மைனர் பெண்ணை மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். தற்போது அந்த சிறுமிக்கு நான்கு மாத குழந்தையும் உள்ளது.
கர்ணன் போல மரப்பெட்டி.. சிவப்பு பட்டு போர்த்தி கங்கையில் மிதந்து வந்த பெண் குழந்தை
சிறுமி தனது சொந்த ஊரான கொழிஞ்சம்புராவிற்கு குழந்தையுடன் செல்ல முடிவு செய்துள்ளார். காவல்துறையினர் வருவதை அறிந்த செல்வம் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.
சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கேரளா மாநில காவல்துறையினர் செல்வத்தைத் தேடி வருகின்றனர். குழந்தையின் டிஎன்ஏவும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.